பண்பாட்டின் பலகணி: ஸ்டாலின் ராஜாங்கம்
பேராசிரியர் டி.தருமராஜ் எழுதிய நான் ஏன் தலித்தும் அல்ல நூலுக்கு பிறகு எனக்குப் பிடித்த ஒன்றாக பண்பாட்டின் பலகணி நூல் இருந்தது.
நாம் புழங்கிக் கொண்டிருக்கும் பண்டிகைகள் பண்பாடுகள் மீதான ஒரு பரந்த ஆய்வு பார்வையை பண்பாட்டின் பலகணி நூல் வழியே முன் வைக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
நாம் கொண்டாடும் நிறைய பண்டிகைகள் நீத்தார் நினைவின் நீட்சியே என்பது தான் ஸ்டாலின் ராஜாங்கம் நூல் முழுமைக்கும் முன் வைப்பது.
பொங்கலே புத்தருக்கான நினைவு கூர்தல் விழா அது போதிப் பண்டிகை என்பது வரலாற்று திரிபாகி போகிப் பண்டிகை ஆனது என ஸ்டாலின் ராஜாங்கம் கூறும் தரவுகள் நம்பத்தகுந்தவையாக உள்ளது. நிறைய கோயில்களில் உள்ள பாத சுவடுகள் சமண மதத்திற்கு உரியது. பாதப் பீடிகைகள் சமணத்திற்கானது என மணிமேகலை நூல் கூறுவதாக ஸ்டாலின் ராஜாங்கம் முன் வைக்கிறார்.
ஆரம்பத்தில் புத்த சமண மதத்தின் நீத்தார் நினைவுகளாக இருந்தவைகளை சைவ,வைணவ சமயங்கள் எடுத்துக் கொண்டதாக நூலில் கூறப்படுகிறது.
நாம் கொண்டாடும் ஆடிப் பண்டிகை,தீபாவளி,சிவராத்திரி என நிறைய பண்டிகைகள் நீத்தார் நினைவின் நீட்சிகள் என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
கள ஆய்வு தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் வரலாறு வழிமறித்து திரித்து வைத்திருக்கும் பண்டிகைகள்,சடங்குகள் மீது மாற்றுப் பார்வையை முன் வைக்கும் ஒரு பண்பாட்டியல் ஆய்வு நூல் இது.ஸ்டாலின் ராஜாங்கம் ஒரு மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளர் என்பதற்கு இன்னும் ஒரு சான்று இந்த புத்தகம்.நல்ல ஒரு வாசிப்பனுபவத்தை கொடுக்கும் புத்தகம்.
Comments
Post a Comment