நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்
///டாக்டர் அம்பேத்கர் எழுதிய "நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்" நூலை முன்வைத்து
இன்றைக்கு தலித்துகள் சுமந்து கொண்டிருக்கும் அத்தனை இழி நிலைகளுக்கும்,சாதிய கொடுமைகளுக்கும் காரணம் இந்து மதம் தான்.
இந்து மதம் என்னுடைய பகுத்தறிவுக்கு ஏற்றதாய் இல்லை. இந்து மதம் என்னுடைய சுய மரியாதைக்கு ஏற்றதாய் இல்லை.தலித்துகளை விலங்குகளை விட கேவலமாக நடத்தும் இந்துமதம் எனக்கான மதம் அல்ல என நாக்பூரில் 14.10.1956 ல் பத்து லட்சம் மக்களுடன் இந்து மதத்தை விட்டு பௌத்த மதத்தைத்தை ஏற்கிறார் அம்பேத்கர்.
தலித்துகள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை எச்சமயத்திலும் இந்துமதம் வழங்காது என பல்வேறு இடங்களில் மதம் மாற்றத்தின் அவசியம் குறித்தும்,அம்மதம் ஏற்படுத்தி வைத்துள்ள சாதிய அடுக்குகளை பற்றியும் அம்பேத்கர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு தான் இந்த நூல்.
வெறுமனே இந்து மதத்தின் மீது உள்ள வெறுப்பிலும்,காழ்ப்பிலும் அம்பேத்கர் புத்தமதத்தை நாடவில்லை.இந்து மதத்தை முழுமையாக ஆராய்ந்ததில் அது எல்லா நிலைகளிலும் தலித்துகளுக்கு அனுகூலமற்ற மதம் என்பதால் தான் கடைசியில் அவர் புத்த மதத்தை ஏற்கிறார்.
இந்து மதத்தில் சாதிப்பாகுபாடுகள் இருப்பதைப் போல கடவுள் இருப்பதை போல புத்த மதத்தில் எதுவும் இல்லை.புத்த மதம் சாதியப் பாகுபாடுகளை எதிர்க்கிறது.
புத்த மதத்தில் கடவுள் என்ற ஒன்று இல்லை அங்கே கடவுளுக்கு பதிலாக அறம் இருக்கிறது.புத்த மதம் என்பது அறத்தைகொண்டு இயங்குவது அதனால்தான் அம்பேத்கர் புத்த மதத்தை ஏற்றுக் கொண்டார் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது இந்நூல்.
RSS தொண்டர்களின் படைத்தளமாக நாக்பூர் இருப்பதால் தான் அவர்களுக்கு ஓர் இக்கட்டான சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காக
மதமாற்றத்த்திற்கான நிகழ்விடமாக நீங்கள் நாக்பூரை தேர்ந்தெடுத்தீர்களா? என அம்பேத்கரிடம் சில பேர் கேட்டதற்கு
நாக்பூர் நாகர்களின் பூமி.தலித்துகள் நாகர்களின் வழி தோன்றல்கள் அதனால்தான் நான் நாக்பூரை தேர்ந்தெடுத்தேன் என்கிறார் அம்பேத்கர்.
கூடுதலாக கீழ்க்கண்ட கூற்றையும் கூறுகிறார் அம்பேத்கர்
"நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் வேலைத் திட்டமானது மிகப்பெரியது.அதை செய்து முடிக்க நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் செலவு செய்தால் கூட போதாது. அப்படியிருக்க அடுத்தவர்களை வெறுப்பேற்ற அதற்காக நான் என்னுடைய நேரத்தை வீணாக்க மாட்டேன்" என்று.
இந்து மதத்திற்கு மாற்றாக தலித்துகளுக்கு ஏற்ற மதம் புத்த மதம் தான் என்பதை திடீரென கைக்கொள்ளவில்லை அம்பேத்கர்.புத்த மதத்தை முழுமையாக ஆராய்ந்து தான் மதமாற்ற முடிவை அவர் எடுக்கிறார்.
அம்பேத்கர் மதமாற்றம் கொள்வதை
"ஏரியோடு கோபித்துக்கொண்டு கால் கழுவாமல் போகிறார் அம்பேத்கர்" என்றும்,
"மூக்கு மயிர் பிடுங்கப்படுவதால் ஆள் பாரம் குறைந்து விடப் போகிறதா? என்றும்,
ராஜாஜியால் "சாத்தானின் இயக்கம்"என்றும் பல்வேறு முறையில் விமர்சிக்கப்பட்ட போதிலும் அம்பேத்கர் தன் நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்துகடைசியில் பௌத்தம் ஏற்கிறார் என்பதை இந்தப் புத்தகத்தின் வழியே நாம் அறிய முடிகிறது.
தலித்துக்களை இந்து மதத்தில் இருந்து பிரிப்பது அல்லது இந்து மதத்தை கைவிட வைப்பது என்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதையும் தாண்டி அம்பேத்கர் அதை சாதித்தும் இருக்கிறார் என்பது சாதனையான ஒன்று
என் ஊரில் அல்லது பிற கிராமங்களிலும் உள்ள தலித்துகளிடம் சென்று இந்து மதம் என்பது ஒரு மதமே இல்லை.அது உருவாக்கிய கடவுள் என்பது பொய். கடவுள் என்ற ஒன்று இந்த உலகத்தில் இல்லை என்று நான் கூறினால் உண்மையில் அம்பேத்கரை விட எங்களுக்கு கடவுள் தான் முக்கியம் என்று சொல்லிவிடுவார்கள்.
அந்த அளவிற்கு இந்து மதம் கடவுள் பற்றை,மதப்பற்றை ஒரு ஆக்டோபஸ்ஸைப் போல தலித்துகளை இறுக்கமாக பிடித்துள்ளது.
இன்றைக்கே நிலைமை இந்த லட்சணம் என்றால் 60 ஆண்டுகளுக்கு முன் அம்பேத்கர் மேற்கொண்ட சிரத்தையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்து மதம் தலித்துகள் வாழ்வதற்கான எல்லா வழிகளையும் அடைத்து நின்றதால் தான் அம்பேத்கர் மதமாற்ற முடிவுக்கே வருகிறார்.தான் பிறந்து வளர்ந்த மதத்தையே ஒருவர் வெறுத்து ஒதுக்கி வேறு மதத்தை ஏற்கிறார் என்றால் அந்த மதம் அவர்களுக்கு எவ்வளவு கொடுமைகளை இழைத்திருக்கு வேண்டும் என்ற கண்ணோட்ட பார்வையில்தான் அம்பேத்கர் புத்த மதத்தை தலித்துகளுக்கான மதமாக தேர்வு செய்கிறார் என்பதை நியாயப்படுத்துகிறது இந்த நூல்.
"மனிதருக்கும் மனிதருக்குமான நியாயமான உறவுகளைக் கூட ஒரு மதம் மறுக்குமென்றால் அது மதமல்ல.வன்முறையின் வடிவம். ஒருவரை மனிதராகவே ஏற்றுக்கொள்ளாத மதம்,மதம் அல்ல. நோய்.விலங்குகள் கூட தொடலாம். ஆனால் மனிதன் தொட்டால் தீட்டு என்று விரட்டு மதம்,மதம் அல்ல. கேலிக்கூத்து"
என்று கூறும் அண்ணல் அம்பேத்கர் மதமாற்றம் தலித்துகளுக்கு ஏன் அவசியம் என்ற புரிதலை இந்த புத்தகத்தின் வழியே ஏற்படுத்துகிறார்///
velu malayan
18.5.2021
❤️❤️❤️❤️
Comments
Post a Comment