செல்லாத பணம்

 ///எழுத்தாளர் இமையத்தின் செல்லாத பணம் நாவல் குறித்து



2009 ஆம் ஆண்டு என்னுடைய அண்ணன் மணிவண்ணன் திருமணமான குறுகிய நாட்களிலேயே திருமண வாழ்வில் அவனுக்கு ஏற்பட்ட கசப்பின் காரணமாக தற்கொலை செய்து கொண்டான்.


முதுகலை தமிழ் இலக்கியம் படித்து அரசு ஆசிரியராக வாழப்பாடியில் பணியாற்றிக் கொண்டிருந்த என் அண்ணன் ஒரு நாள் பள்ளிக்குச் செல்கிறேன் என்று வாழப்பாடி  சென்றவன் வீடு திரும்பாமல் காணாமல் போனான்.


ஒரு வார காலம் எங்கு தேடியும் கிடைக்காத என் அண்ணன் வாழப்பாடியில் உள்ள ஒரு சோளக்காட்டில் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டான்.


சோள காட்டில் சோளத்தட்டு அறுத்து கொண்டிருந்தவர்கள் சோளக் கொல்லையிலிருந்து துர்நாற்றம் வருவதை அறிந்து காவல்துறைக்கு தெரிவித்து இறந்து கிடப்பது என் அண்ணன் தான் என்று உறுதி செய்தார்கள்.


சேலம் அரசு மருத்துவமனையில் கிட்டத்தட்ட ஒன்றரை நாட்கள் பிணவறையின் முன்பாக எங்கள் குடும்பம் பிணமாக நின்று கொண்டிருந்தது.


அதிகுளிரூட்டப்பட்ட பிணங்களை கிடத்தி வைத்திருக்கும் ஒரு அறைக்குள் நுழைந்து பார்த்தபோது தலை பிளந்த நிலையில் ஒரு பிணம்,பஸ்ஸோ அல்லது லாரியோ ஏறி பாதி சிதைந்த உடலுடன் கூடிய  ஒரு பிணம் என பல்வேறு உயிரற்ற உடல்கள் ஒழுங்கற்ற முறையில் கிடத்தப்பட்டிருந்தன.


என் அண்ணனை அந்த பிணங்களுக்கு மத்தியில் ஒரு பெரிய பிளாஸ்டிக் விரிப்பு போட்டு சுற்றி வைத்திருந்தார்கள்.


பிணக்கூராய்வு செய்யும் அளவுக்கு உடல் இல்லாமல் பாதி உடல் அழுகிய நிலையில் இருந்ததால் மருத்துவர்கள் பிணக்கூராய்வு  அறிக்கையை குறித்துக்கொண்டு என் அண்ணனை ஒரு நீண்ட பொட்டலமாக எங்களிடம் ஒப்படைத்தார்கள்.


கிட்டத்தட்ட பல மாதங்கள் பிணவறையின் வாடை என் மீது அடிப்பது போன்ற உணர்வை என் மனம் உற்பத்தி செய்து கொண்டே இருந்தது.


பிணவறையின் முன் நின்று கொண்டிருக்கும் போது வாகன நேர்ச்சியில் இறந்தவர்கள்,

தற்கொலை செய்து கொண்டவர்கள் என எத்தனை விதமான சாவுகள்.

எத்தனை விதமான துயர்கள்,அழுகையை பார்க்க முடிந்தது.  


மருத்துவமனைகள் உருவாக்கும் ஒருவித வாசனை எனக்கு எப்போதுமே ஏற்றுக்கொள்வதில்லை. மருத்துவமனையின் வாசனையை  நான் சாவின் வாசனையாகவே உணர்கிறேன்.


அப்படிப்பட்ட ஒரு மருத்துவமனையில் தீக்குளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண்ணையும், மருத்துவமனையையும் மட்டுமே வைத்து கொண்டு வாசிக்கும் மனம் கனத்துப்போகும் ஒரு நாவலை எழுதியுள்ளார் இமையம்.


நாம் பார்த்து கேட்டறிந்த சமூகத்தில் நிகழ்ந்த,நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வை அணு அணுவாய் மனம் பதைக்க எதார்த்த மொழியில் எழுதியுள்ளார் இமையம்.


கோவேறு கழுதைகள் நாவலில் புதிரை வண்ணார்களின் வாழ்வியலையும் ஆரோக்கியம் என்ற பெண்ணின் சுரண்டலையும் எழுதியிருப்பார் இமையம்.


பெத்தவன் நெடுங்கதையில் சாதிய முரணின் கூர்முகத்தையும்,


எங்கதெ நாவலில் ஆண் பெண் உறவு சிக்கலை ஒரு ஆணின் உள வலியுடனும்,


வாழ்க வாழ்க நாவலில் அரசியல்வாதிகளால் நடத்தப்படும் அரசியல் கூட்டத்தின் அவலநிலையை அடித்தட்டு மக்களின் பார்வையில் பேசிய இமையம் செல்லாத பணம் நாவலில் தீயில் கருகிய ஒரு பெண்ணின் கதையை வாசிக்கும் மனம் கருக எழுதியுள்ளார்.


கணவனுடன் ஏற்பட்ட சண்டையில் தீ குளித்ததால் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஒரு பெண்ணுக்காக பெண்ணின் பெற்றவர்களும் அவளது அண்ணனும் படும் வேதனையை செல்லாத பணம் என்ற பெயரில் நாவலாக்கியுள்ளார் இமையம்.


இன்ஜினியரிங் படித்து TCS Software கம்பெனிக்கு தேர்வான ஒரு பெண் பர்மா தெருவிலிருக்கும் ஆட்டோ ஓட்டும் ஒரு அகதியை எப்படி காதலிப்பாள்.அதுவும் அவன் இவளை விட சாதியில் தாழ்ந்தவன்.


தன் பெயரை கையில் பச்சைக்குத்திக் கொண்டான், பிளேடால் தன் கையை கீறிக்கொண்டான் என்பதற்காக ஆட்டோ ஓட்டும் ரவியை காதலிக்க முடியுமா.இது சாத்தியமா?ஆனால் ஒரு சில பெண்கள் அப்படி இருக்கிறார்கள்.


ரேவதியின் கல்லூரி தோழியும் அவளது அண்ணியுமான அருண்மொழி ரேவதியிடம் காலேஜ் படிக்கும் போது உன் பின்னாடியே சுத்தி சுத்தி வந்தானே டாக்டரோட பையன் அவனையே நீ Choose பண்ணியிருக்கலாம் எனும் போது தோணல என்கிறாள் ரேவதி.

உண்மையில் மனித மனதின் பித்து நிலைக்கு காரணங்கள் கிடையாது.


இமையம் பாஷையில் சொன்னால்


"ஒலகத்திலேயே மனசு மாதிரி தரங்கெட்டது,வெக்கம் கெட்டது எதுவுமே இருக்காது"


நாவல் மருத்துவமனை, தீக்குளித்த ரேவதி உள்ள 5 வது மாடி ICU Ward தாண்டி வேறு எங்கும் பயணிப்பதில்லை.மருத்துவமனை செவிலியர்கள்,வாட்ச்மேன்கள், ரேவதியின் அப்பா,அம்மா அண்ணன்,அண்ணி என இவர்களைச் சுற்றிதான் கதை சுழல்கிறது.


ரேவதியின் அப்பா பள்ளி தலைமை ஆசிரியர், அண்ணன் TCS Software கம்பெனியில்  வேலை செய்பவன். ரேவதியும் TCS கம்பெனியில் வேலைக்கு தேர்வானவள்.உயர் ஜாதி என இவ்வளவு இருந்தும் பின் எப்படி ரேவதி ஆட்டோகாரனை தன்னைவிட ஜாதியில் குறைந்தவன் மீது அவளுக்கு காதல் வருகிறது என கேள்வி எழுகிறது.கேள்வி எழுந்தாலும் ரேவதி போன்ற பெண்கள் இருக்கவே செய்கிறார்கள். பெண்களின் மனம் ரொம்ப சிக்கலானது.


வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்ப்பதால் மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்வதால் வேறு வழியின்றி அவள் இறக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக விருப்பமின்றி தங்கள் கெளரவங்களை எல்லாம் விட்டு இறங்கி ரவிக்கு ரேவதியை திருமணம் செய்து வைக்கிறார்கள்.


திருமணம் செய்து வைத்த பிறகு அவளுடன் எந்த தொடர்பும் இல்லாமல் வாழ்கிறார்கள் ரேவதியின் அம்மா அமராவதி,அப்பா நடேசன் அவளுடைய அண்ணன் ஆகியோர்.


ரேவதியின் அம்மா மட்டும் ரேவதியினுடைய அப்பா, அண்ணனுக்கு தெரியாமல் பணம் கொடுத்து உதவி செய்து வருகிறாள்.


தன்னுடைய தங்கைக்கு கருமாதி செய்து விட்டதாகவே நினைக்கிறான் ரேவதியினுடைய அண்ணன் முருகன்.ரேவதியினுடைய தந்தை நடேசனும் தன் மகள் ஒரு ஆட்டோக்காரன்,தன்னைவிட தாழ்ந்த ஜாதியில் உள்ளவனை திருமணம் செய்து கொண்டாலே என்று மனம் கூசி தன்னுடைய கௌரவத்தை விட்டு இறங்காமல் ரேவதியை புறக்கணிக்கிறார்கள்.


ஆட்டோகாரன் பொண்டாட்டி என்று அவளை ஏளனப்படுத்துகிறார்கள்.


ரேவதி வெந்த நிலையில் அவசர சிகிக்சை பிரிவில் இருக்கும் போது ரேவதியின் அண்ணன் மனைவி அருண்மொழி ரேவதியின் கணவன் ரவியைப் பார்த்து ஏண்டா அவளை கொளுத்தின என கேட்கும் போது அவளாகத்தான் கொளித்துக் கொண்டாள் நான் கொளுத்த வில்லை என்கிறான்.


அப்போது ரவிக்கும்,அருண் மொழிக்கும் நடக்கும் விவாதம் நாவலில் மிக முக்கியமானது.


என் மனைவி ரேவதியை ஆட்டோக்காரன் மனைவி, குடிகாரனின் மனைவி என்று ஒதுக்கி வைத்த ரேவதியினுடைய அப்பா, அம்மா,அண்ணன் ஆகியோர் தான் அவளை ஒதுக்கி வைத்து கொன்று விட்டார்கள்.அவர்களுடைய கௌரவம் தான் அவளைக் கொன்று விட்டது என்கிறான் ரவி.


நான் குடிகாரன்தான் சல்லிப் பையன் தான்.நான் அப்படித்தான் இருப்பன்.

ஆனால் ரேவதியினுடைய அப்பா, அம்மா பணக்காரர்கள் பெரிய மனிதர்கள் ஆனால் அவர்கள் பெரிய மனிதர்களாக நடந்து கொள்ளவில்லை.


என்னையும் என் மனைவியையும் நிராகரித்தார்கள்.தீயில் வெந்து விட்டாள் என்று இப்போது 10 லட்சம் கையில் வைத்துக் கொண்டு அலைந்து அழுது கொண்டிருக்கும் அவளுடைய அப்பா எனக்கு  இரண்டு ஆட்டோ வாங்கி  கொடுத்திருந்தாள் எங்களுக்குள் ஏன் சண்டை வரப்போகிறது.


ரவி தன்னுடைய அம்மா ஆட்டோவுக்கு கட்டுவதற்காக 40 ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பியதில் ஒரு 500 ரூபாய் எடுத்து சரக்கு அடித்து விட்டு வந்து விட்டேன்.அம்மா கொடுத்த பணத்தில் ஏன் 500 ரூபாய் எடுத்தாய் என்று ரேவதிக்கும் எனக்கும் வாக்குவாதம் வந்தபோது நீ இப்படியே செய்தால் நான் செத்துவிடுவேன் என்று கூறினாள்.போய் சாவு என்று ஒரு பேச்சுக்கு சொன்னேன்.அவசரப்பட்டு ஆட்டோவுக்கு வைத்திருந்த டீசலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டாள் என்கிறான்.


தன் மகள் தங்களுடைய விருப்பத்திற்கு மாறாக தங்களைவிட வசதியில் ஜாதியில் தாழ்ந்தவனை திருமணம் செய்து கொண்டாள் என்பதற்காக நிராகரித்த அந்த அவமானத் தீ தான் என் மனைவியை  பொசுக்கி விட்டது என்கிறான் ரவி.


மனித மனம் ஏன் மானம்,அவமானங்களுக்கு அஞ்சுகிறது.

யாரோ ஏதோ சொல்லி விடுவார்கள் என்று ஏன் கூசி நிற்கிறது.


பணம்,வீடு,வசதி இருப்பதாலேயே மனிதர்களுக்கு கெளரவம் என்ற ஒன்று எங்கிருந்து வந்துவிடுகிறது.


மனித உறவுகளும் மனித மனங்களும் மிக மிகச் சிக்கலானவை.


தன் தங்கை விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டாள் என்பதால் அவள் செத்து விட்டதாக எண்ணிக்கொள்ளும் ரேவதியின் அண்ணன் முருகன் அவள் தீயில் விழுந்து இறக்கும் நிலையில் இருக்கும் போது உடைந்து போய் அழுகிறான்.


முழுதாய் தீயில் சிதைந்த நிலையில் இருக்கும் ரேவதி முருகனை பார்க்கும்போது  ஒரே தடவை என்னை ரேவதி என்று கூப்பிடு அண்ணா என்று அவள் கேட்கும் போது வார்த்தைகள் வராமல் விக்கி வெளியே வந்து விடுகிறான் முருகன்.


நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுக்கும் போது ரேவதி நான் சமையல் செய்து கொண்டிருக்கும் போது உப்பு பாட்டிலை எடுப்பதற்காகத் திரும்பிய போது தண்ணீர் மேடையிலிருந்த மண்ணெண்ணெய் கேன் சாய்ந்து குழம்பிலும்,அடுப்பிலும் கொட்டியதும் தீ பிடித்துக்கொண்டது.வேறு யாரும் இதற்கு காரணம் இல்லை என்று சொல்லி விடுகிறாள்.


உண்மையில் ரேவதி அவளே தீ வைத்துக் கொண்டாளா? அல்லது அவள் கணவன் தான் தீ வைத்து அவளை கொல்ல நினைத்தானா? என்பதை நாவலில் கடைசிவரை சொல்வதே இல்லை இமையம்.



ஒரு வேளை அவளே கூட தீ வைத்துக் கொண்டிருக்கலாம் அல்லது அவள்  கணவன் ரவி அதை செய்திருக்கலாம் என்ற யூகத்திற்கு விட்டு விடுகிறார் இமையம்.


நாவலில் ரேவதி என்ன சாதி என்பதை ரேவதி இறந்த பிறகு ரவி மீது கம்ப்ளைன்ட் கொடுக்கும் போது ரேவதியில் அப்பா தன்னுடைய பெயர் நடேசன் தகப்பனார் பெயர் கேசவ பிள்ளை என்று எழுதும் இடத்தில் தான் அவள் என்ன சாதி என்று தெரிகிறது.


ஆனால் ரவி என்ன சாதி  என்று நாவலில் எங்கேயும் குறிப்பிடுவதில்லை.


ஒழுக்கமில்லாதவன் எந்த சாதியில் பிறந்திருந்தாலும் அவன் கீழ் சாதி தானே.


பர்மாவில் நன்றாக வாழ்ந்த குடும்பம் ரவியின் குடும்பம்.பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு அகதியாய் வந்து வாழ்ந்து கெட்ட குடும்பமாய் வாழ்கிறார்கள்.


ரேவதி இறந்த பிறகு அவளை ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு வரும்பொழுது ரேவதியின் அம்மா அமராவதி மருத்துவமனையை திரும்பிப் பார்க்கும்போது முழுதும் எரிந்த நிலையில் ஒரு பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவமனைக்குள் தள்ளிக் கொண்டு செல்வதை பார்ப்பதுடன் நாவல் முடிகிறது.


பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் இந்த நாவலை வாசிக்கும் பொழுது அமராவதி மற்றும் நடேசனின் அழுகுரலும்,அவஸ்தையும் உங்கள் அடி நெஞ்சை அறுக்கும்.


இந்திய சமூகத்தின் குடும்பங்களில் ஒட்டு மொத்த பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பல்வேறு வன்முறை வடிவங்களுக்கு தீயில் சிதைந்து இறந்து போகும் ரேவதி ஒட்டுமொத்த துயர்களின் ஒற்றைக் குறியீடு எனக் கொள்ளலாம்.


நாவலின் பலவீனம் என்று பார்த்தால் திரும்பத் திரும்ப ரேவதியின் அப்பா நடேசன் அவளுடைய அம்மா அமராவதி,அண்ணன் முருகன்,அவளுடைய அண்ணி அருண்மொழி ஆகியோர் பேசிக்கொள்வதும், தொடர்ந்து கதையின் களமாக காட்டப்படும் மருத்துவமனை ஊழியர்களின் குரல் என ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது.


ஒரு சிறுகதையாக,குறுநாவலாக எழுதவேண்டியதை நீட்டி நாவலாக எழுதியிருக்கிறார் இமையம்.


ஆனாலும் ரேவதி சாகக் கூடாது என்ற பதைபதைப்பையும்,துயரையும் வாசிப்பவர்களின் மனதிற்குள் கடத்தி விடுவதில் இந்த நாவல் நல்ல நாவல் என்ற அந்தஸ்தை பெறுகிறது.


சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் எதார்த்தவாத படைப்புகளை கொடுப்பவர்கள் வரிசையில் முக்கியமான இடத்தில் இருக்கிறார் இமையம்.


ஆனால் தொடர்ச்சியாக சமூக அவலங்களையே களமாக கொண்டு ஒரே வகையான எதார்த்தமான இது போன்ற படைப்புகளை கொடுப்பதிலிருந்து சற்று விலகி வேறு கோணங்களிலும் இமயம் அவரது படைப்புகளை கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.


அடர்த்தியான மொழிச் செறிவு கொண்ட இலக்கிய மொழிகளில் எழுதப்படுவதில்லை இமையத்தின் படைப்புகள்.


ஆனாலும் அவர் படைப்புகளில் இலக்கிய உயர்வும்,கலைத்திறனும் இருக்கும்.


உண்மையில் ஆண் பெண் உறவில் குடும்பம் என்ற அமைப்புக்குள் குறிப்பாக பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை ரேவதி என்ற பெண்ணின் மரணத்தை வைத்து இந்நாவலில் பேசியிருக்கிறார் இமையம்.


ஒரு உயிரை காக்க முடியாத இடத்தில் பணம் செல்லாத ஒரு காகிதம் ஆகி விடுகிறது.


நாவலில் காவலராக வரும் ஆனந்தகுமார் எல்லா காவலர்களும் தவறானவர்கள் அல்ல என்பதற்கான உதாரணம்.


தனக்கு நீதி கிடைக்காத மதுரையை எரித்த கண்ணகி பிறந்த மண்ணில் தன்னை புரிந்து கொள்ளாத ஒழுக்கங்கெட்ட குடிகார  கோவலன்களால் சித்ரவதையில் எரித்து கொல்லப்படுகின்ற அல்லது தன்னையே எரித்துக் கொள்கின்ற அப்பாவி நவீன கண்ணகிகளின் கவலை கதை இந்த செல்லாத பணம்.///


Velu malayan

24.3.2021


நாவல்:செல்லாத பணம்

ஆசிரியர்:இமையம்

பதிப்பகம்:க்ரியா

விலை:ரூ.285/-

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்