யாத்வஷேம்

 ///கன்னடத்தில் நேமிசந்த்ரா எழுதி கா.நல்லதம்பி தமிழில் மொழிபெயர்த்த "யாத்வஷேம்" நாவலை முன்வைத்து



கன்னட படைப்புகள் எப்பொழுதுமே விஷயகனமும்,கலை கனமும் கொண்டவை என்பதற்கு இன்னுமொரு சான்று இந்த யாத்வஷேம் நாவல். 


யாத்வஷேம் என்ற சொல் "ஹிட்லரின் நாஜி வதை முகாம்களின் விவரம்,வதை முகாம்களில் கொல்லப்பட்ட யூதர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களை கணினியில் பாதுகாத்து வைத்திருக்கும் ஜெருசேலமில் உள்ள ஒரு நினைவுச்சின்னம் மற்றும் ஆவண காப்பகத்தின் பெயரைக் குறிக்கிறது".


1943ல் இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் இன வெறி காரணமாக ஒரு யூத  சிறுமி தன் தாய்,அக்கா,தம்பி ஆகியோரை பிரிந்து விஞ்ஞானியாக இருக்கும் தன் தந்தையுடன் ஹிட்லர் மண்ணிலிருந்து காந்தி மண்ணிற்கு வருகிறாள்.


அந்த சிறுமிக்கு பெங்களூரில் உள்ள ஒரு இந்து ஒக்கலிகர் குடும்பம் அடைக்கலம் கொடுக்கிறது.


 ஹ்யானா மோசஸ் என்ற அந்தப் பெண்ணின் பெயரை அனிதா என்று பெயர் மாற்றி அவளை அந்த வீட்டுப் பையன் விவேக் உடன் திருமணம் செய்து வைத்து அவளை ஒரு இந்து பெண்ணாக மாற்றி விடுகிறார்கள்.


உடலளவில் மட்டுமே அவள் ஒரு இந்து பெண்ணாக மாறுகிறாள்.அவள் உள்ளத்தில் அவள் குடும்பத்தை பிரிந்த துயரை தாங்கியே ஒரு யூத பெண்ணாகவே தன் நாட்களை கழிக்கிறாள். 


ஒரு கட்டத்தில் தன் மகன் விஷால் உதவியுடன்  வயோதிக வயதில் தன் கணவர் விவேக் உடன் தன் குடும்ப நபர்களைத் தேடி தன்னுடைய தாய் நிலத்தைத் தேடி ஜெர்மன் செல்கிறாள். இதுதான் நாவலின் கதை.


அனிதா(ஹ்யானாமோசஸ்) அவளது கணவன் விவேக் இருவரை மட்டுமே வைத்துக் கொண்டு இருவர்  பார்வையில் மாறி மாறி நாவலை நகர்த்தும் கதை சொல்லல் ஒரு நல்ல யுக்தி.


உலக வரலாற்றின் ஒரு இருண்ட நிகழ்வான யூத இனப்படுகொலை வரலாற்றை மையப்படுத்தி ஒரு வரலாற்று நாவலுக்குக்கான தரவுகளோடும், மெய்த் தன்மையுடனும் இந்நாவல் எழுதப்பட்டுள்ள வகையில் முக்கிய நாவல் என்ற கவனத்தை பெறுகிறது யாத்வஷேம்.


நாவலின் பலம் என்பது ஹ்யானா மோசஸின் மனதில் உள்ள துயரையும், தொலைந்து போன அவருடைய அம்மா,அக்கா,தம்பி ஆகியோரைத் தேடி ஜெர்மனியின் டகாவ் வதை முகாம் மற்றும் வாஷிங்டனில் உள்ள ஹோலோகாஸ்ட் மியூசியம், ஜெருசேலமில் உள்ள யாத்வஷேம் ஆகிய இடங்களில் தேடி அலையும் போது ஹ்யானாவிற்கு எழும் தவிப்பையும்,பதற்றத்தையும் நமக்குள்ளும் நாவல் கடத்துவது தான்.


ஹ்யானா மோசஸ் தன்னுடைய அக்கா ரெபாக்கா மோசசை கண்டடைந்து கட்டி அழும் தருணம் வாழ்வை மீட்டெடுத்து இவ்வளவு நாள் தேக்கி வைத்துள்ள அனிதாவின் துயர் எல்லாம் உடையும் ஒரு கணத்தை கண்முன் காட்டுகிறார் நேமிசந்த்ரா.

               (எழுத்தாளர் நேமிசந்த்ரா)

ஹ்யானாவிடம் ரெபாக்கா மோசஸ் ஹிட்லர் வதை முகாமில் தான் பட்ட கஷ்டம், வன்புணர்வுகள் துயரை சொல்வது மனதை இறுக்கம் கொள்ளச் செய்கிறது.


வதைமுகாமிலிருக்கும் யூதர்களை புதிய மருந்துகளை பரிசோதிக்கும் பரிசோதனை எலிகளாக நாஜிக்கள் பயன்படுத்தியது என ஒரு பெரும் இன அழிப்பின் வலியை பதிவு செய்கிறது நாவல்.


அலெக்ஸ் ஹேலியின் ஏழு தலைமுறைகள்,சா.பாலமுருகனின் சோளகர் தொட்டி நாவல் மற்றும் சயந்தனின் ஆதிரை போன்ற ஈழப் போர்,அதன் துயர்கள் பற்றிய படைப்புகளை நீங்கள் வாசித்திருந்தால் எவ்வளவு வதைகளையும் ஏற்றுக்கொள்ளும் மனம் உங்களுக்கு வாய்த்துவிடும்.


நாவலில் மிக முக்கியமான இடம் ஹ்யானா,ரெபாக்கா மற்றும் அவருடைய மகன் டெர்ரி ஆகியோருக்கு இடையே நிகழும் விவாதம் தான்.


இஸ்ரேல் நிலம் எங்களுக்கானது என நீங்கள் கூறுவதும்,பாலஸ்தீன மக்களை வெளியேற்றுவதும் யூதர்களை ஜெர்மனியிலிருந்து விரட்டிய ஹிட்லரின் இன வெறிச்செயலுக்கு ஒப்பானதே என ஹ்யானா கூறுகிறாள்.


இனம்,மதம், சாதி,மொழி எல்லாவற்றையும் கடந்த ஒரு மானுட வாழ்வும்,உலகமும் வேண்டும் என்கிறாள் ஹ்யானா.


யூதர்கள் முஸ்லிம்களின் பழைய ரத்த உறவானவர்கள்.யூதர்களின் கடவுள் மோசஸ்,இஸ்லாமியர்களின் கடவுள் அல்லா,இந்துக்களின் கடவுள் கிருஷ்ணர் எல்லாமே ஒன்று தான் என்கிற பக்குவத்தை இந்திய மண்ணில் அடைகிறாள் அனிதா.


நாவலின் பெரிய பலவீனம் என்பது திட்டமிட்டே எழுதப்பட்ட  நாவலின் இறுதி அத்தியாயம் தான்.


ஹ்யானாவும்,விவேக்கும் இஸ்ரேலிலிந்து இந்தியா திரும்பும் போதே நாவல் முடிந்து விடுகிறது.


இறுதியில் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு குடும்பத்தை இழந்த ஒரு இஸ்லாமிய பெண் சபிதா என்ற பெயரில் ஹ்யானா(அனிதா) வீட்டுக்கு தஞ்சமாக வருவது,அனிதாவின் ( ஹ்யானா) மகன் விஷால் அந்தப் பெண்ணை காதலிப்பதும்,

அந்தப் பெண் ஒரு இஸ்லாமிய பெண் என தெரிந்ததும் அவளை அவன் தன்னை அவள் ஏமாற்றி விட்டாள் என வெறுப்பதும்,

யார் உன்னை ஏமாற்றினார்கள்? இனவெறியில் குடும்பத்தை இழந்த ஒரு பெண்ணின் வலி உனக்கு தெரியுமா? என விஷாலை அவனது தாய் அடிப்பதால்,விஷாலின் தந்தை தன் தாயின் முன்வரலாறு,வலி எல்லாவற்றையும் சொல்லி அவனுக்கு புரிய வைக்கும் போது அவன் திருந்தி தன் தாய் மடியில் முகம் வைத்து அழுவதுடன் நாவல் முடிகிறது.

    
        (எழுத்தாளர் கா.நல்லதம்பி)


தன் தாயின் முன் வரலாறு தெரியாமல் எப்படி ஒரு மகன் இருப்பான் என்ற கேள்வி எழுகிறது.இவ்வளவு நாள் தான் எப்படி இந்தியா வந்தேன் என்ற கதையை  ஒரு மகனிடம் ஒரு தாய் சொல்லாமலா இருந்திருப்பாள் என்ற கேள்விகள் எழவே செய்கிறது.


இனவெறியில் பாதிக்கப்பட்டவர்கள் உலகின் எல்லா நிலப்பரப்பிலும் இருக்கிறார்கள்.


ஹிட்லர் மண்ணில் மட்டுமல்ல இனவெறி காந்தி பிறந்த மண்ணிலும் இருக்கிறது என்பதை சொன்னது சரி என்றாலும் அதை திட்டமிட்டு நாவலின் முடிவாக்கியது ஒரு சின்ன நெருடல்.


இந்நாவலின் இறுதி பகுதி கலைத் தன்மையின் கனம் கொஞ்சம் குறையும் இடம் என்றே கருதுகிறேன்.


இது கிட்டத்தட்ட ஒரு சராசரி இந்திய  சினிமாவின் இறுதிக் காட்சியை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.


மற்றபடி பார்த்தால் இது ஒரு நல்ல வரலாற்று புனைவு நாவல்.


போரில் வென்றவர்கள் என எவரும் இல்லை.அதற்கு எடுத்துக்காட்டு ஹிட்லரின் மரணம்.


ஆரியர்கள்,யூதர்களை விட சுத்தமானவர்கள்,உயர்வானவர்கள் என்கிற ஹிட்லரின் இனவெறி தான் 60 லட்சம் யூதர்களை  கொடூரமாய் கொலை செய்ய வைத்தது.


"நமக்குள் பிறந்து விடக்கூடிய ஹிட்லரை தடுக்கும் பொறுப்பு நம்முடையது" என்ற  கருத்தை அழுத்தமாய் நம் முன் வைக்கிறது இந்நாவல். 


இந்நாவல் வாசிக்கும் போது இந்தியாவில் பிறந்து விட்ட வெள்ளை தாடியுடன் கூடிய ஹிட்லரின் நியாபகம் வருவதை கீழ்காணும் வரிகள் சொல்கிறது


"கடந்த நூற்றாண்டில் ஐரோப்பாவில் மட்டுமே ஹிட்லர் பிறந்திருந்தான்.இப்போது வருத்தமாக இருக்கிறது ஹிட்லர் எங்கே வேண்டுமென்றாலும் பிறந்து விடலாமென்று" 


இந்தியாவில் நிகழும் இஸ்லாம் மத வெறுப்பு,மதப் பெருமைகள்,சாதிய பெருமைகள் மீது ஒரு பரந்த விவாதத்தை எழுப்புகிறது இந்நாவல்.


க.நல்லதம்பி அவர்களின் சிறந்த மொழிபெயர்ப்பு இந்நாவல் ஒரு நேரடி படைப்பு என்ற உணர்வை கொடுக்கிறது.


நாவல் பெயர்: யாத்வஷேம்

கன்னட மூலம்:நேமிசந்த்ரா

தமிழில்:கா.நல்லதம்பி

பதிப்பகம்:எதிர் வெளியீடு

விலை ரூ.399/-///


velu malayan

17.3.2021

Comments

  1. இப்போது அனைத்து நாடுகளிலும்..அனைத்து ஊர்களிலும் ஹிட்லர்கள் இருக்கிறார்கள்...கண ணுக்கூதெரியாமல்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்