///வண்ணநிலவனின் "கடல்புரத்தில்" நாவலை முன்வைத்து

என் தந்தை ஒரு சிறு விவசாயி என்பதால் விவசாயம் மட்டுமே ஜீவனம் நடத்த அவருக்கு வழியாக இருந்தது.
அவருக்கு வேறு எந்த வேலையும் தெரியாது. எங்கும் போகவும் மாட்டார்.

நாங்கள் குடியிருப்பது எங்கள் விவசாய நிலத்திலேயே தான்.ஊருக்கும் எங்கள் விவசாய நிலத்திற்கும் அரை கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருக்கும்.

ஊரில் வீடு கட்டிக் கொள்ளலாம் என நான் என் அப்பாவிடம் சொன்னபோது இல்லை வேண்டாம் தோட்டத்திலே வீடு கட்டிக் கொள்ளலாம் என சொல்லிவிட்டார்.

என் அப்பாவிற்கு அவர் வாழ்ந்த அந்த வாழ்க்கையை,அந்த இடத்தை விட்டு வர அவர் மனம் எப்பொழுதும் ஒப்புக்கொள்ளாது என எனக்கு தெரியும்.

என்னைப் பொருத்தவரை  எங்கள் நிலம் என்பது எனக்கு சொத்து மட்டுமே.
ஆனால் என் அப்பாவிற்கு அது வாழ்க்கை முறை.

 எனக்கு கிடைத்த கல்வியின் மூலம் ஒரு அரைகுறையான அரசு வேலையில் என்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு பிறந்த கிராமத்தை,சோறு போட்ட நிலத்தை திடுமென துறந்து நகர்ப்புரத்தில் வசிக்கும் இந்த அடையாளத்துறவை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்த அளவு என் அப்பா ஏற்றுக்கொள்ள மாட்டார்.

 அப்படி அடையாளத்தை இழக்க விரும்பாத ஒரு மீன் பிடிக்கும்  மீனவ தகப்பனுக்கும்,படித்த அவரது மகனுக்கும் உள்ள தலைமுறை இடைவெளி முரண், விசைப்படகுகளின் வளர்ச்சியால் படகு மூலம் மீன் பிடிப்பவர்களின் வாழ்வு நசிவு ஆகியவற்றை பேசுகிறது கடல் புரத்தில் நாவல்.

மணப்பாட்டு எனும் கடல்புரத்தில் வாழும் மீனவ பறக்குடிகளின் அன்றாட வாழ்வியல், அவர்களின் அக உணர்ச்சிகளின் எழுத்துச் சித்திரம் இந்நாவல்.

குரூஸ் மிக்கேல்,அவருடைய மனைவி மரியம்மை, மகன் செபஸ்தியன்,மகள் பிலோமி ஆகியோர் உள்ளடக்கிய ஒரு குடும்பத்தை மையப்படுத்தி விரிகிறது நாவல்.

நாவலின் மையப் பாத்திரங்கள் என்பவர்கள் குரூஸ் மிக்கேலும், அவரது மகள் பிலோமியும் தான்.

குரூஸ் மிக்கேல் தன்னுடைய தாத்தா காலத்து வல்லம் ஒன்றை வைத்துக்கொண்டு அதில் மீன் பிடித்து ஜீவனம் நடத்திக் கொண்டிருப்பவர்.
அவருடைய மகன் செபஸ்தியான் பக்கத்து ஊரான வேப்பங்காட்டூரில் அரசு ஆசிரியராக பணிபுரிகிறான்.

அவனுக்கு ஒரு ஆசை இருக்கிறது அது மணப்பாடு கடல்புரத்தில் இருக்கும் வீடு மற்றும் தன்னுடைய அப்பாவின் வல்லத்தை எல்லாம் விற்று விட்டு உடன்குடியில் ஒரு சாயபுடன் பார்ட்னராக இணைந்து சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைக்க வேண்டும் என்பது.
ஆனால் செபஸ்தியனின் அப்பா குரூஸ் மிக்கேலுக்கு இதில் உடன்பாடு கிடையாது.

நாவலில்  பிலோமிக்கும்,சாமிதாசுக்கும் இடையேயான காதல் ஒரு கைகூடாத காதலாக முடிகிறது.
பிலோமி தன்னுடைய உடலையே ஒரு தருணத்தில் சாமிதாசுக்கு கொடுக்கிறாள்.

சாமிதாசை நெஞ்சு முழுக்க நிரப்பி வைத்து காதலிக்கிறாள்.ஆனால் சாமிதாஸ் வீட்டில் பார்க்கும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.

பொருளாதார வர்க்க முரண் இவர்களின் காதலை முறிக்கிறது.சாமிதாசின் அப்பா லாஞ்சி (விசைப்படகு) வைத்துள்ளவர். பிலோமியின் அப்பா பழைய படகின் மூலம் மீன் பிடிப்பவர்.வசதியற்றவர்.

சாமிதாசை பிலோமி தன்னை மணந்து கொள்ளுமாறு எந்த விதத்திலும் வற்புறுத்துவதில்லை.அப்படி அவள் செய்வதாக இருந்தால் தேவாலயத்தில் சாமிதாசுக்கும் வேறு பெண்ணுக்கும் திருமண ஒப்பந்தம் நடக்கும்போது ஒரு வார்த்தை பாதரிடம் அவள் ஆட்சேபனை செய்திருந்தால் திருமணமே தடைபட்டிருக்கும் ஆனால் பிலோமி அதைச் செய்வதில்லை.

நாவலில் பிலோமியன் அம்மா மரியம்மைக்கும்,அந்த ஊர் வாத்தியாருக்கும் உள்ள உறவு புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. ஊர் முழுவதும் அவர்களின் உறவைத் தவறாக பேசுகிறார்கள். ஆனால் அது வெறும் நட்பு என மரியம்மையும்,பிலோமியும் சொல்கிறார்கள்.

ஒருநாள் பிலோமி தன்னுடைய  அம்மாவின் பெட்டியை திறந்து பார்க்கும் போது அதில் வாத்தியாரின் இளவயது போட்டோ ஒன்று இருப்பதை பார்க்கிறாள். தன் தாயைப் புரிந்து கொண்டவன் என்பதால் கடைசியில் பிலோமியும் வாத்தியாருடன் ஒரு ஆறுதல் தரும் மனிதனை கண்டெடுத்த மகிழ்ச்சியில் அவருடன் பழகுகிறார்.

 மரியம்மையின் மரணம்,வல்லத்தின் மூலம் பிடிக்கும் மீன் வரத்து குறைவால் தன்னுடைய வீடு,வல்லம் ஆகியவற்றை விற்று விடும் குரூஸ் ஒரு கட்டத்தில் மனம் சிதைந்து பைத்தியமாகுகி விடுகிறார்.

தன்னுடைய அம்மா மரியம்மையின் மரணம், சாமிதாசின் இழப்பு,
தன்னுடைய அப்பா குரூஸ் மிக்கேல் மனப்பிறழ்வுக்குள்ளாவது என எல்லாவற்றையும் தனக்குள் பூட்டி தன்னை தனக்குள்ளே புதைத்துக் கொள்கிறாள்.

நாவலில் பிலோமிக்கும்,ரஞ்சி என்பவளுக்குமான நட்பு பிலோமிக்கு ஒரு இளைப்பாறலாக இருக்கிறது.
ரஞ்சி பிலோமியின் அண்ணன் செபஸ்தியனை காதலிக்கிறாள்.
ஆனால் செபஸ்தியன் வேறு ஒரு வசதியாக பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.ஒரே சாதியாக இருந்தாலும் வர்க்க முரண் நிறைய காதல்களை முறித்து விடுகிறது.

லாஞ்சி வைத்திருக்கும் ஐசக் , ரொசாரியா பர்னாந்து இடையே மூழும் தொழில் பகை வன்மமாக மாறுகிறது.

ரொசாரியா ஐசக்கின் லாஞ்சியை கொளுத்தி விடுகிறான்.அதனால் ஐசக் கோபத்தில் ரொசாரியாவை கத்தியால் குத்தி கொன்று விடுகிறான்.பிறகு ஒரு கட்டத்தில் ஐசக் பைத்தியமாகி கடற்கரைகளில் விழுந்து திரிந்து கிடக்கிறான்.

ஒரு மீனவ பறையர் குடும்பத்தை பற்றி தொடங்கும் நாவல் குடும்ப உறவுகளின் முரண்கள், அங்குள்ள மனிதர்கள், கடற்கரை கிராமத்தின் புற வெளி சித்தரிப்பு, நவீன வளர்ச்சியால் விசைப்படகுகள் பெருகி சாதாரண படகு வைத்திருப்பவர்களின் வாழ்வை நசுக்குவது, அதன் பின்னொட்டு எழும் பகைமைகள்,

கல்வி மற்றும் பொருளாதார நுகர்வின் பொருட்டு கிராமத்தை விட்டு அகல நினைக்கும் இன்றைய தலைமுறைகளின் மனநிலை என நிறைய விஷயங்களை பேசுகிறது கடல்புரத்தில் நாவல்///
நாவல் : கடல் புரத்தில்
ஆசிரியர் : வண்ணநிலவன்
பதிப்பகம் : காலச்சுவடு
விலை: ரூ.140/

Comments

Popular posts from this blog

ஆக்காண்டி-வாசு முருகவேல்

கரமசோவ் சகோதரர்கள் (The Brothers Karamazov)

கடவுள் தொடங்கிய இடம்