///எழுத்தாளர் பாமாவின் "கருக்கு" நாவலை முன்வைத்து

தமிழில் எழுதப்பட்ட  தன் வரலாறுகளில் உ.வே.சாவின் என் சரித்திரம்,நாமக்கல் கவிஞரின் என் கதை நூல்களே சிறந்தவை என எழுத்தாளார் பெருமாள் முருகன் அவர்கள் கூறியிருந்தார்.
மேற்கண்ட இரண்டு நூல்களைத் தாண்டி பிற தன் வரலாற்று நூல்கள் அதிகம் கவனம் பெறாமல் போனதற்கு காரணம் அவை உண்மைகளை உரித்து காண்பிக்காமல் எழுதப்பட்டதே காரணம்.

இங்கே எழுதுவதற்கு அவரவர் வாழ்க்கையே நம்முன் ஒரு வாய்ப்பாக இருக்கிறது.வாழ்க்கையை அதன் நிறம் மாறாமல் புனைவும்,பூச்சும் அல்லாமல் எழுதுவது தான் தன் வரலாற்றின் வெற்றியாகும்.

அப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வுகளை அதிகபட்ச நிஜத் தன்மையின் தொனியுடன் பதிவு செய்யப்பட்டதாக இருக்கிறது பாமாவின் கருக்கு நாவல்.

தமிழில் தலித் தன்வரலாற்று நூல்களுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது கருக்கு நாவல்.

நாவல் என்ற வடிவ வகைமைக்கு உட்படாத ஒரு படைப்பு இது.
பாமாவின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவ நினைவுகளின் தொகுப்பாக இருக்கிறது.

சாதியின் கோர நாக்கு பனங்கருக்காய் நீண்டு தன்னை ரணப்படுத்தியதை அதை எதிர்த்து அல்லது ஏற்றுக் கொண்டு தான் கல்வி கற்று நிமிர்ந்ததின் பதிவு இந்நாவல்.

ஒட்டுமொத்த தலித்துகள் சாதியால் அவமானப்படுத்தப்பட்ட வலிகளின் பிரசவிப்பு கருக்கு நாவல்.

இந்தியாவில் பிறந்த ஒரு தலித் என்னவிதமான அவமானங்களுக்கும், ஏளனங்களுக்கும்,நெருக்கடிகளுக்கும் உள்ளாகுவார்களோ அதைத்தான் பாமாவும் அனுபவித்திருக்கிறார்.

தான் பிறந்த மதுரை வட்டார மொழியில் அந்த மக்கள் பேசும் மொழியிலேயே நாவல் எழுதப்பட்டுள்ளதும்,
எதார்த்த தொனியிலான கதை கூறல் முறையும் தான் இந்நாவலின் பெரும் பலம்.

தான் பிறந்த ஒரு கிராமத்தின் அழகியலை விவரிப்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது.தன் பால்ய கால பள்ளிக்கால நண்பர்களை அவர்களுடனான நிகழ்வுகளை பகடி கலந்து பதிவு செய்கிறார்.

பொதுவாக இன்றும் இந்திய கிராமங்கள் தன்னுடைய சாதிய நிறத்தை கொஞ்சமும் மாற்றிக் கொள்ளாமல் அப்படியே இருக்கிறது.

கிராம மனிதர்களின் புற வாழ்வியல் நவீனமாய் மாறியுள்ளது.ஆனால் மனித மனங்கள் தன்னுடைய அடிமனதில் சாதிய மனோநிலையை அப்படியே தேக்கி வைத்திருக்கிறது.

இப்போதே அப்படி என்றால் 40 வருடங்களுக்கு முன்பு சாதியின் உக்கிரம் எப்படி இருந்திருக்கும் என்பதை
என்னுடைய பாட்டியை 10 வயது நாய்க்கர் பையன் கூட பெயர் சொல்லி தான் அழைப்பான் என்றும்,தான் பேருந்தில் பயணம் செய்யும் போது தான் என்ன சாதி என்று தெரிந்ததும் இருக்கையை விட்டு எழுந்து நின்று கொள்வார்கள் என்பதையும் வேதனையுடன் பதிவு செய்கிறார்.

தன்னுடைய சாதிக்காரர்கள் நாயக்கமாரிடம் வேலை செய்யும்போது கடையிலிருந்து ஒரு தலித் தான் வேலை செய்யும் ஒரு நாய்க்கருக்கு வடை பொட்டலத்தை கையில் தொடாமல் சரடில் கட்டி எடுத்துப் போவதை பாமா அறியாத வயதில் வேடிக்கையாக பார்க்கிறார்.

விவரம் தெரியும்போது ஏன் இப்படி என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொள்கிறார்.

சாதியத்தின் நிராகரிப்புகள்,
ஏளனங்களிலிருந்து தன்னையே எட்டி நகர்த்தி பள்ளி,கல்லூரி என படித்து ஆசிரியையாக தன்னை நிறுத்திக் கொள்கிறார்.

கிறித்தவ மடாலயத்தில்  கன்னியாஸ்திரியாக,ஆசிரியராக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் பாமா அங்கும் சாதியத்தின் கோர நிழல் தன்னை பின்தொடர்வதை பார்க்கிறார்.
கிறித்தவ மதத்திலும் சாதிய பாகுபாடு உள்ளதை பதிவு செய்கிறார்.கிறித்துவ மதத்தில் உள்ள நாடாரும்,கிறித்துவ மதத்தில் உள்ள தலித்தும் சமம் அல்ல. இருவருமே இயேசுவை தொழுபவர்கள் ஆனால் இருவரும் வேறு வேறு.

கிறித்துவ மடாலயங்களில்,கிறித்துவ நிறுவனங்களில் நடக்கும் கயமை, போலித்தனங்களை பார்த்து மனம் வெறுத்து அங்கிருந்து வெளியே வந்து விடுகிறார்.

மதுரை கிராமங்களில் பட்டியில் வகுப்பிலுள்ள பள்ளர்களுக்கும்,
பறையர்களுக்கும் ஏற்படும் முரண்களையும் சண்டைகளையும் மேல்சாதி காரன்ங்க இருக்கிற ஊர்ல ஒத்துமையா இல்லாம இதுங்களே ரெண்டும் சண்ட போட்டுக்குதுங்க என பதிவு செய்கிறார்.

பறையர் சமூகத்திற்கும்,சாலியர் சமூகத்திற்கும் நடக்கும் சண்டைகளையும்,காவல் துறைக்கூட ஆதிக்க சாதியான சாலியர்களுக்கு உதவியதை, அதனால் எழுந்த வழக்குகளை பாமா பதிவு செய்கிறார்.

சாதிய, மத மற்றும் பெண்ணிய முரண்களின் எல்லா தளங்களையும் பாமாவின் எழுத்து நுட்பமாய் பேசுகிறது.

தன் பள்ளியில் படிக்கும்போது சாய்ந்த நிலையில் உள்ள ஒரு தென்னை மரத்தில் ஏறி பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது தெரியாமல் விழுந்த தேங்காய் பிஞ்சுக்காக திருட்டுப் பட்டம் கட்டிபள்ளியிலிருந்து துரத்தப்படும் பாமா
தலித்துகள் என்றாலே திருடுபவர்கள், ஒழுங்கீனமானவர்கள் என்ற பொது சமூகத்தின் புரையோடிய மனநிலைக்கு தன் கல்வி மூலம் பதிலளிக்கிறார்.

பொதுவாக எல்லா தலித்துக்களும் எதிர்கொள்ளும் நிகழ்வுகளையே இந்நாவலும் பதிவு செய்தாலும் இந்நாவலின் தனித்துவமாக கருதுவது நாவல் எழுதப்பட்ட வட்டார வழக்கு மொழியிலான சொல் முறை, பதிவுசெய்யப்பட்ட நிகழ்வுகளின் உண்மைத்தன்மை என நல்ல படைப்பின் அந்தஸ்தை கருக்கு நாவல் பெறுகிறது.

பாமாவின் சொந்த வாழ்க்கை சாதி,
மதம், வர்க்கம் போன்றவற்றின் நெருக்கடிகளால் சிதைவுற்றதை  பதிவுசெய்யும் இந்த நாவல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதும்,
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதும், பாடநூலாக்கப்பட்டதும் இந்நாவலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது///

12.4.2020

Comments

  1. இன்றைய காலகட்டத்தில் புத்தகம் வாங்கினாலும் படிப்பவர்கள் குறைவு படித்தாலும் அதைப்பற்றி எழுதுவது மிகக் குறைவு .தொடர்ந்து எழுதுங்கள் மகிழ்ச்சி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்