" கதை கேட்கும் சுவர்கள்" நாவலை முன்வைத்து

தன் வரலாற்று நூலின் தகுதி என்பது அந்நூல் அதிகபட்சம் புனைவுகளற்ற உண்மைத் தன்மைகளை கொண்டிருக்கவேண்டும்.

தன் வரலாற்றை கூறுபவர் தான் வாழ்ந்த வாழ்க்கையை எவ்வித ஒளித்துக் கொள்ளுதலுமின்றிய உண்மையைக் கூற வேண்டும்.

அந்த வகையில்  நான் வாசித்த தன்வரலாற்று நூல்கள் அரவிந்த மாளகத்தியின் " கவர்ன்மெண்ட் பிராமணன் மற்றும் ராஜ் கௌதமனின் "சிலுவைராஜ் சரித்திரம்" ஆகிய இரண்டும் அதிகபட்சம் உண்மைத்தன்மை கொண்டு எழுதப்பட்ட தன் வரலாறுகள் என நினைக்கிறேன்.

கமலா தாஸின் "என் கதையை" கூட கூறலாம். ஆனால் அது புனைவுகள் பூசி எழுதப்பட்ட தன்வரலாறு என்பதால் அதை விட்டு விடலாம்.

உண்மை வாழ்க்கையை ஒளிவு மறைவின்றி பதிவு செய்த தொனியில் "கதை கேட்கும் சுவர்கள் " நூலை ஒரு நல்ல தன்வரலாற்று நூலாகப் பார்க்கிறேன்.

கடந்த காலம் மிக யதார்த்தமான ஒன்று.
அதை அப்படியே அங்கீகரித்து எழுதப்பட்டது இந்த நாவல்.

கோயம்புத்தூரில் பிறந்து தன் தந்தை வயதுடைய கேரளாவின் பணக்காரன் ஒருவனுக்கு தன் தாயின் நிர்பந்த்தால்  நான்காம்  தாரமாக்கப்பட்டு தன் பால்யமும், தன் பருவமும், வாழ்வும் சிதைக்கப்பட்டவளின் கதை.

தன்னை ஏமாற்றிய,சிதைத்த தன் தாயை,இந்த உலகை,இந்த வாழ்க்கையை,இந்த மனிதர்களை வெறுத்து ஒதுக்காமல் கேரளாவின் திருச்சூரில் "சாந்தி மெடிக்கல் இன்பர்மேஷன் சென்டர்" மூலம் ஏழைகளுக்கு சிறுநீரக உறுப்பு தானம் செய்தும், அட்டப்பாடி மற்றும் லட்சத் தீவில் டயாலிசிஸ் மையத்தை தொடங்கி அர்ப்பணிப்போடு சமூக சேவகியாக தன்னை இயக்கிக் கொண்டிருப்பவரும், இந்தியாவின் சிறந்த 100 பெண்மணிகளுள் ஒருவராக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விருது பெற்றவருமான உமாப்ரேமன் என்பவரின் சுயவரலாற்று நாவல் இது.

பெற்றோர்களின் மன விரிசலால், அல்லது ஒரு பெண் கணவனை விட்டு விட்டு வேறு ஒருவனுடன் செல்வதால் அந்த குடும்பத்தின் கட்டமைப்பும், குழந்தைகளின் உள நிலை குலைவதையும்,அவர்களின் எதிர்காலம் சீரழிவதையும் மையச் சரடாக கொண்டது இந்நாவல்.

உமாவின் தந்தை கேரளாவின் பாலக்காட்டிலிருந்து வந்து கோயம்புத்தூரிலுள்ள சிந்தாமணிப்புதூரில் மருத்துவராக இருந்த புண்ணியவனம் டாக்டரிடம் கம்பவுண்டர் ஆக வேலைக்கு சேர்ந்தவர்.

கதையின் களம் கோயம்புத்தூர் என்பதால் அங்குள்ள பெரும்பான்மைச் சமூகமான கவுண்டர் வீடுகளில் உள்ள வயதானவர்களின் புரையோடிய சீழ் வழியும் புண்களுக்கு மருந்திட்டு அவர்களுக்கு வைத்தியம் பார்க்கும் வேலையை செய்கிறார் பாலன்.

அவனது மனைவி அவ்வேலையை வெறுக்கிறாள்.அதனால் அந்த கம்பவுண்டர் வேலையை விட்டுவிட்டு அங்குள்ள ஒரு மில்லில் வேலைக்கு சேருகிறார் பாலன்.

ஆரம்பத்தில் தன் தந்தை செய்யும் கம்பவுண்டர் வேலையை, வயதான பாட்டியின் புண்களைக் கழுவி மருந்திடுவதை உமா கூடவெறுக்கிறாள்.

அப்போது உமாவுக்கும் அவரது தந்தைக்கும் நடக்கும் ஒரு உரையாடல் மிக முக்கியமானது.

உன் சொந்த பாட்டியாக இருந்தால் நீ இப்படி பார்ப்பாயா? என்று உமாவைப் பார்த்து அவள் தந்தை கேட்கும்போது ஆமா என்னுடைய சொந்த பாட்டியாக இருந்தா நான் பார்க்க மாட்டேன் என்கிறாள்.

அவர்களும் ஒரு நாள் உனக்கு சொந்த பாட்டியாக தெரிவார்கள் என்கிறார்.

நீயும் உன் மனசும் வளரும் போது உனக்கு இதெல்லாம் புரியும் என்கிறார்.

பின்நாளில் உமா அன்னை தெரசாவை சந்திப்பதற்கும்,தன்னை சேவையில் ஈடுபடுத்திக் கொள்வதற்கும் ஆதாரப்புள்ளி அவளுடைய அப்பா பாலகிருஷ்ணன் தான்.

தன்னுடைய கடனைத் தீர்க்கவும்,
தான் ஜீவனம் நடத்துவதற்கான மூலப்பொருளாகவும் எண்ணி மகளை மற்றவர்களுக்கு விற்கும் எதிர்மைகளின் உருவம் கொண்ட ஒரு கொடூர தாய்க்கும்,பாதுகாப்பு தேடித் திரியும் ஒரு அப்பாவி மகளுக்கும் நடக்கும் போராட்டத்தை பதிவு செய்கிறது இந்நூல்.

தனது ஆறாவது படிக்கும் போது கணக்கு வாத்தியார் சுப்பராயன் தன் தொடையில் கிள்ளுவதை தவிர்க்க சார் குச்சியால் எவ்வளவு வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளுங்கள்.

ஆனால் தொடையில் மட்டும் கிள்ளாதீர்கள்.அப்படிக் கிள்ளினால் வெறட் மாஸ்டரிடம் சொல்லிவிடுவேன் என தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உமா வளர்ந்த பிறகு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய தன் தாயால் வாழ்வே சிதைந்து நிற்கிறாள்.

தாயின் அகந்தை மனம்,
தாயின் சுகபோக வாழ்வின் ஆசை,பணம், பணம் படைத்தவனின் காமம் ஆகியவற்றால் உமாவின் வாழ்வு உறிஞ்சி உருகுலைக்கப்படுகிறது.

பால கிருஷ்ணன் நாயர் :

மில் வேலை முடிந்து பகுதி நேரமாக கவுண்டர் வீடுகளில் உள்ள வயதானவர்களுக்கும் அங்குள்ள சக்கிலியர்களுக்கும் வைத்தியம் பார்த்து சேவை செய்கிறார்.

அதில் கிடைக்கும் தானியங்களையும் பொருட்களையும் அங்குள்ள சக்கிலிய மக்களுக்கு கொடுத்து உதவுகிறார்.
சக்கிலிய பெண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்வதற்கு தன் பெயரை அவர்களின் கணவனாக பயன்படுத்துகிறார்.

பாலகிருஷ்ணன் என்ற பெயரில் மட்டும் தான் அவர் கிருஷ்ணர்.
கட்டிய இரண்டு மனைவிகளும் அவரை விட்டு வேறு ஒருவருடன் ஓடிவிடுகிறார்கள்.
முதல் மனைவியை பக்கத்துவீட்டு பழனிச்சாமியும் இரண்டாவது மனைவியை தன் சொந்த அக்காவின் மகன் ஹரியும் அபகரிக்கிறார்கள்.

அவமானங்களையும்,கசப்புகளையும் சுமந்து கொண்டு மனைவிகள்,
குழந்தைகளைப் பிரிந்து கடைசியில் இந்த  குரூர வாழ்வின் கையிலிருந்து மரணித்து விடுதலையடைகிறார் பாலன்.

தங்கமணி:

இப்படியும் ஒரு தாய் இருப்பாளா? என்ற கேள்விக்கு பதிலாகவும்,கணவனுக்கு அடங்காமல் அவனை மீறி அவனை கடந்து பல ஆண்களுடன் வாழும் மன வலு பெற்றவள்.

அதனால்தான் சிந்தாமணிப்புதூரில் அண்ணன்மார் கதை எனும் கதை கூறும் கூத்தில் பெண் வேடமிட்டு நடிப்பவனிடம் நான் உன்னுடனே வந்துவிடுகிறேன் என்னை கூட்டிக்கொண்டு போ என்று கேட்கிறாள்.

தீபாவளி நாளில் பக்கத்துவீட்டு பழனிசாமியுடன் கணவனை குழந்தைகளை விட்டு ஓடிப் போகிறாள்.

உமா சொல்வது போல இந்த கதை கூறப்படும் காலம் 1960 களில் சினிமா கதாநாயகிகள் உதட்டுச் சாயம் பூசுவது போல அந்த பகுதியில் தன் தாய் மட்டும் உதட்டுச் சாயம் பூசுவாள் என்றும் நல்ல சிவப்பான அழகி என்றும் கூறுகிறாள்.

பாலகிருஷ்ணன் நல்லவர்தான் அவர்மூலம்  உமா, தம்பிக்குட்டன் என இரண்டு குழந்தைகளை பெற்றெடுக்கும் தங்கமணி தன் கணவனை விட்டு வேறு ஆணுடன் செல்கிறாள்.

தன் கணவனின் உடல் புணர்வைத் தாண்டி அவள் மனதில் ஏதோ ஒரு நிறைவேறாத பள்ளங்கள் இருக்கிறது.

அப்படி பாலகிருஷ்ணன் நிரப்ப முடியாத பள்ளங்களைத்தான் கூத்து நடிப்பவனிடமும்,பழனிச்சாமியிடமும் அவள் தேடுவது.

ஒரு பெண்ணின் உடல் பசியை தீர்க்க எந்த ஆணும் உகந்தவனாக இருக்கலாம். ஆனால் அவளின் எண்ணப் பசிக்கு?

ஒரு பாவமும் அறியாத பாலகிருஷ்ணனுக்கு அவள் செய்வது பெரிய துரோகம்.

தங்கமணி தன்னுடைய சுதந்திரத்திற்காக,சுய வாழ்க்கைக்காக பெற்ற மகளை ஐம்பது வயது கடந்த பிரேமனுக்கு 50,000 ரூபாய்க்கு விற்கிறாள். அவளுடைய ஒழுங்கில்லாத வாழ்க்கையால் உமாவின் தம்பி தம்பிகுட்டனும் கட்டிய மனைவிக்கு இரண்டு பெண்குழந்தைகளை கொடுத்துவிட்டு வேறு ஒருவளுடன் வாழ்ந்து கெட்டு கடைசியில் உமா காரில் செல்லும்போது அவளிடம் பிச்சைக்கேட்டு நிற்கிறான். அந்த இரு குழந்தைகளையும் உமா தான் பாதுகாத்து வளர்க்கிறார்.

பிரேமன் கேரளாவில் உள்ள ஒரு பணக்காரன்.அவனுடன் உமா வாழ்ந்த விருப்பமற்ற,வெறுமை வாழ்விற்கு சரத் என்ற குழந்தை அவளுக்கு ஒரு வித முழுமையை தருகிறது.பிரேமன் காச நோய் முற்றி இறந்து விடுகிறார்.

இறப்பிற்கு முன் என் பெயரில் உள்ள சொத்தை விற்று சேவை மையம் ஆரம்பித்து கொள்ளவும் என பிரேமன் உமாவின் பெயருக்கு ஒரு உயில் எழுதிவிட்டு செல்கிறார்.

"அப்போது எந்தக் கடவுளின் முன்னாலும் பெரியவர்களின் முன்னாலும் மத்தளம் கொட்ட வரிசங்கு நின்றூத பிரேமன் எனக்கு தாலிகட்டி மனைவியாக்கவில்லை.
பிரேமனின் மனைவியும் அல்லாத விதவையுமல்லாத நான் அன்றிலிருந்து உமாபிரேமன் ஆனேன் " என்கிறார் உமா.

எந்த பந்தமும் இல்லாத சிறுநீரகம் செயலிழந்த 21 வயது வாலிபன் சலீல் என்பவனுக்கு தனது வலது கிட்னியை கொடுத்து அவன் உயிரை மீட்டெடுக்கிறார் உமா.

தங்களுடைய சாந்தி மையத்தில் நோயாளியாக வரும் மாரியப்பன் என்பவனுக்கு அவனது தாயே கிட்னி தர மறுக்கும் நிலையில் ரத்த உறவுகளே சுத்தமில்லாத சுயநல உலகில் தன் சாதியற்ற தன் மதம் அல்லாத சலீல் என்பவனுக்கு தன் கிட்னியை கொடுத்து அர்ப்பணிப்பில் அன்னை தெரசாவையும் தாண்டி நிற்கிறார் உமா.

தாயின் அன்பும்,தந்தையின் அரவணைப்பும் முழுமையாகக் கிடைக்காமல் செய்த வாழ்க்கை, தன்னை ஒட்டுமொத்தமாக சிதைத்த மனிதர்கள் மீது எந்த பழிவாங்குதல் உணர்வும் கொள்ளாமல் இயலாதவர்களுக்கும்,
உறவுகளும் இந்த வாழ்வும் நிராகரித்து நிற்கும் அரவணைப்பற்றவர்களுக்கும் ஆதரவளித்து வரும் சேவை மனதின் உருவம் உமாப்ரேமனின் இந்த வாழ்க்கை நமக்கு சொல்வது.

இந்த வாழ்க்கை துயரங்களால் நம்மை துவட்டி துவள வைத்து இன்னும் துயரங்களை கைகளில் ஏந்தி குரூரமாக நம்மை நோக்கி சிரித்தாலும்,பிறருக்காக வாழ்தலில் தான் பிறவிப்பயன் என்பதே.

கே.வி.ஷைலஜா அவர்களின் மொழிபெயர்ப்பு இந்நூலை நாம் அணுக்கமாக உணர ஒரு காரணம்.///

Comments

Popular posts from this blog

ஆக்காண்டி-வாசு முருகவேல்

கரமசோவ் சகோதரர்கள் (The Brothers Karamazov)

கடவுள் தொடங்கிய இடம்