///பன்னலால் பட்டேலின்
"வாழ்க்கை ஒரு நாடகம்" நாவலை முன்வைத்து

குஜராத்தின் மால்வா பகுதியின் கிராமம் ஒன்றின் மார்கழி மாதத்து நடுநிசப்த இரவில் வாயில் உக்கா இழுத்தபடி இருக்கும் வயதான இடது கை முடமான காலு பட்டேலின் நினைவின் வழியே நிகழ்காலத்திலிருந்து பின்னோக்கி 1956 ஆம் ஆண்டின்  நிகழ்வுகளாக நாவல் விரிகிறது.

வாலா படேல் எனும்  கிழவனின் 60ஆவது வயதில் காலு படேல் மகனாக பிறக்கிறான்.காலுவின் அம்மா ரூபா கிழவி.வாலா படேலுக்கு வாரிசே இல்லாமல் இருந்ததால் வாலா கிழவனின் சொத்தெல்லாம் நமக்குத் தான் வரப் போகிறது என கனவு காண்கிறார்கள் வாலா படேலின் தம்பி பரமா படேலின் குடும்பத்தார்.

இந்நிலையில் காலு பிறப்பதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.பரமா படேல் நல்லவன்.ஆனால் பரமா படேலின் மனைவி மாலி, அவனது மகன்கள் நாநா,ரண் சோட் மோசமானவர்கள்.

இந்நாவலில் காலுவின் சித்தி மாலியின் பாத்திரம் என்பது ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் வரும் கங்கம்மா பாத்திரம் போன்றது. கங்கம்மா நாவல் முழுவதும் எல்லோரையும் சபித்துக் கொண்டே இருப்பாள்.அவள் வாழ வேண்டிய வயதில் விதவையாகுவதால் அவள் அக வறட்சியில் எல்லோரையும் சபிக்கிறாள். ஆனால் மாலி அகம் பொறாமை குணம் நிரம்பியது. காலுவின் பிறப்பையே தவறாக பேசுகிறாள்.அதனால் காலுவின் அம்மா ரூபாவிடம் அடியும் வாங்குகிறாள்.

குஜராத் கிராமம் ஒன்றின் மண் மனம் மாறாத மனிதர்கள்,காலு குடும்பத்திற்கும்,நாநா குடும்பத்திற்கும் இடையேயான பகை,இயற்கையின் வஞ்சத்தால் ஏற்படும் மிகப் பெரும் பஞ்சம்,அதனால் மக்கள் கொள்ளும் வதை என எந்த மிகையுமின்றி அசலான ஒரு கிராமத்தை,மண்ணை, மனிதர்களை தன் எழுத்தின் வழியே நமக்கு காண்பிக்கிறார் பன்னலால் பட்டேல்.

உக்கா இழுத்துக் கொண்டும், அபினி கரைத்து குடித்துக் கொண்டும் வாழும் கிராம மனிதர்கள்,அம்மக்கள் வாழும் நிலம்,வாழ்வியல் என அவ்வளவு மண்ணியல் தன்மையுள்ள மனிதர்களை பதிவு செய்கிறது நாவல். நாவலில் கிராம மக்கள் பேசும் சொலவடைகள் அவ்வளவு யதார்த்தமாக கையாளப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு

"அரிவாளின் காயத்திலிருந்து கூட பிழைத்து விடலாம் ஆனால் அவச்சொல்லின் காயத்திலிருந்து தப்பவே முடியாது"

"எட்டிப்பழம் அழகாக இருக்கிறது என்பதற்காக அதை தின்று விட முடியுமா?அழகைப்பார்த்து மயங்கினாள் அவ்வளவுதான் "

"தையற்காரர் உயிருள்ளவரை தைத்து தான் ஆகவேண்டும்"

"வெல்லம் இனிப்பு தான் அதனால் முழங்கால்களுக்கு என்ன பயன்"

"பிறந்த வீட்டிற்கு போன பெண்ணும் மலையை அடைந்த குறவனும் யாருடைய பிடிக்கும் கட்டுப்பட மாட்டார்கள்"

நாவலில் மிக முக்கிய அம்சம் காலுவுக்கும், அவனது காதலி ராஜிக்கும் இடையேயான காதல் தான்.
சிறு வயதிலேயே காலுவுக்கு நிச்சயக்கப் படுகிறாள் ராணி. ஆனால் ஒரு கட்டத்தில் காலு எதிர்பாரா விதமாக பலீ என்றப் பெண்ணை திருமணம் செய்ய நேர்கிறது .காலு மிகவும் உடைந்து போகிறான்.

காலுவின் அம்மா ரூபா காலுவிடம் நீ இரண்டாவது திருமணம் அதாவது ராஜியை மணக்கக் கூடாது என சத்தியம் வாங்கிக் கொண்டு இறந்து விடுகிறாள். காலு பலீயை ஏற்க முடியாமல் பற்றற்று வாழ்கிறான்.

ஒரு கட்டத்தில் பலீயை அவளது
பிறந்தகத்துக்கு அனுப்பி விடுகிறான். மனம் கொஞ்சம் இறங்கி தன் சித்தப்பா பரமா மூலம் பலீயை வீட்டுக்கு அழைத்து வருகிறான்.பாலீயின் சித்தப்பா முறையில் உள்ள வேறு ஒருவருக்கு ராஜி மனைவியாகிறாள்.

ஆனால் காலுவின் நெஞ்சிலிருந்தும், நினைவிலிருந்தும் கடைசி வரை ராஜி இறங்குவதே இல்லை.
காலுவுக்கும்,ராஜிக்கும் இடையேயான இந்த உறவு அவஸ்தை நாவலின் கடைசி அத்தியாயத்தில் இன்பமாய் முடிவு கொள்கிறது.

இடையில் ராஜியை அடைய காலுவின் சித்தப்பா பரமா படேலின் மகன் நாநா எவ்வளவோ முயல்கிறான்.
கடைசியில் அது தோல்வியில் முடிகிறது.

மலைப்பாம்பு தன் இரையை மெதுவாக உள்ளிழுத்து விழுங்குவது போல இந்நாவலில் பஞ்சம் மனிதர்களை பசி வடிவில் விழுங்குகிறது.

நாவலில் விவரிக்கப்படும் பஞ்சக் காட்சிகள் நம்மை உறைய வைப்பவை. அதுவும் கிராமத்திற்கு அடுத்துள்ள ஒரு குன்றில் காலு ஒழிந்து கொண்டு மாடு, எருமைகளை ஊரிலிருந்து கொள்ளையடித்துக் கொண்டு தள்ளாடி நடக்க முடியாமல் பசி வெறியில் எருமையை கழுகு கொத்துவது போல் ரத்தம் உறிஞ்சி தின்னும் குறவர்களைப் பார்த்து மிரண்டு ஓடுகிறான் காலு.
இந்த காட்சி பஞ்சத்தின் உச்சக்கட்ட கோரத்தை நாவலில் பதிவு செய்கிறது. குன்றிலிருக்கும் குறவர்கள் பஞ்சத்தால் காலு வசிக்கும் கிராமத்தையே சூறையாடுகிறார்கள்.

ஒரு வேளை உணவு கிடைக்காமல் மக்கள் பசியால் மடிகிறார்கள்.
மக்கள் ஊரை விட்டு வேறு ஊருக்கு செல்கிறார்கள்.

பரமா படேலின் மனைவி மாலி கொள்ளையர்களுக்கு பயந்து தன் நகைகள்,தன் மருமகள்களின் நகைகள் அனைத்தையும் முடிச்சுப் போட்டு கூடவே வைத்திருக்கிறாள்.ஒரு நாள் ஊருக்கு வெளியே கல்இடுக்குகளில் ஒட்டுத் துணியில்லாமல் செத்து கிடக்கிறாள் மாலி கிழவி.

கொள்ளையர்கள் அவளுடைய துணி, நகைகளை பறித்துக் கொண்டு அவளை கொன்று விடுகிறார்கள்.கடைசியில் அவளை எரிக்கும் போது அவள் வாயில் காலு தன் கையில் உள்ள வெள்ளி மோதிரத்தின் ஒரு பகுதியை உடைத்து வைக்கிறான்.நாநா வின் குடும்பம் அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்கிறது.

எல்லாவற்றையும் விட கொடிய பிசாசு பசி.ஆனால் பசியிலும் மிகப்பெரிய கொடுமை பிச்சை ஏற்பதுதான்.
பசி எலும்பையும் தசையையும் தான் உருக்கி விடுகிறது.ஆனால்  பிச்சை எடுப்பது நம் கௌரவம்,ஆத்மா எல்லாவற்றையும் அப்படியே உருக்கி விடுகிறது என்கிறான் காலு.

அதனால் தான் ஓரிடத்தில் ஒரு வேலை சாப்பாட்டுக்காக ஒரு பெண்ணிடம் பாத்திரங்களை தன் முடக்கைகளால் பள பளவென்று வெளக்கி கொடுத்து ஒரு கவளம் சோறு வாங்கி சாப்பிடுகிறான். மனிதன் கொடியவனல்ல.
பசி தான் கொடியது என்கிறான் காலு.

ஊரே பஞ்சத்தில் பட்டினியில் கிடக்கும்போது அரசு தானிய கிடங்குக்கு தானியங்களை ஏற்றிச் செல்லும் போது அதை ஏற்றிச்செல்லும் தானிய வண்டியை ஓட்டிச் செல்லும் காபூலிடம் காலு சண்டையிடும் காட்சி இடம் முக்கியமானது.

காபூலியை தாக்கும் போது துப்பாக்கி குண்டு பட்டு தன் இடது கையை ஊனமாக்கி  கொள்கிறான்.பிறகு காபூலி பஞ்சத்தின் நிலையை,கோரத்தை உணர்ந்து கொள்கிறான்.அப்போது காலுவைப் பார்த்து காபூல்சொல்கிறான் இந்த கிராமம் முழுவதிலும் ஒரே ஒரு ஆண்பிள்ளையை தான் பார்த்தேன். கிராமத்து மக்கள் பசியால் வாடுகிறது என்று சொன்னானே, அந்த காளை உங்கள் தானியம் தானே அதை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்.கடவுளின் வீட்டில் இதற்கு தீர்ப்பு நடக்கும் என்கிறான்.கட்டிப்பிடித்து சண்டையிட்டு கொண்ட காலுவும்,காபூலியும் நட்பாகி பிரியாவிடைபெறும் இடம் மனிதம் துளிக்கும் இடம்.

ஒருவேளை கஞ்சிக்காக சுந்தர் சேட் என்பவனிடம் மக்கள் எல்லோரும் வரிசையில் நின்று தானியம் வாங்க நிற்கும் போது  காலு அதை வாங்க மறுக்கிறான். நான் ஒரு சேட்டாக இருந்தால் பிச்சை எடுப்பேன்.
ஆனால் நான் ஒரு விவசாயி அல்லவா பிச்சை எடுப்பது கேவலம் என்கிறான் காலு.

எந்த உயர்ந்த பிறவிக்கு எதிரே மன்னாதி மன்னர்கள் கூட கையேந்திப் பிழைத்தார்களே அவன் இன்று கையை நீட்டிக் கொண்டிருக்கிறான்.
அதுவும் ஒன்றரை ஆழாக்குத் தானியத்திற்காக சீ இது என்ன ஈனப்பிறவி என வருந்துகிறான்.

காலு தண்ணீரின்றி உணவின்றி பட்டினியால் நா வரண்டு இறக்கும் தருவாயில் இருக்கும்போது ராஜி குனிந்து தன் மார்பகங்களை காலுவிற்கு காட்டுமிடம் தாய்மையின் உச்சகட்டம்.

12 மாதங்களாக மழையே இல்லாத பூமியை மழை வந்து நனைக்கிறது.
காலு ராஜியுடன் வீட்டை நோக்கி நடக்கும்போது இனி காலனே வந்தாலும்  இந்த ஆண் பிள்ளையை கொல்ல அழிக்க அவனுக்கு தைரியம் வராது என்று அவள் நம்பிக்கை கொள்வதாய் நாவல் முடிகிறது.இயற்கைக்கும் ஒரு தனி மனிதனுக்குமான போராட்டத்தில் கடைசியில் காலு பிழைத்துக் கொள்கிறான்.

ஆனாலும் இயற்கை தான் அவனை பிழைக்க வைக்கிறது மழை வடிவில்.

குஜராத்தி மொழியின் "மானவீனி பாவாய் " என்ற நாவலின் தமிழ் வடிவமே வாழ்க்கை ஒரு நாடகம் நாவல்.இது  நாவலின் முதல் பாகம். மீதி இரண்டு பாகங்கள் குஜராத்தி மொழியில்
"பாங்க்யானாப் பேரு, "தம்மர் வலோனும் என்று இரண்டு பாகமாக உள்ளது. ஆனால் தமிழில் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை.

 அந்த இரண்டாவது பாகத்தில் தான் காலுவின் பிள்ளைகளான ராஜி,பிரதாப் ஆகியவர்களை காலுவின் சித்தப்பாவின் மகன் நாநா கொன்று விடுவதாக நாவலின் முதல் அத்தியாயத்தில் காலுவே சொல்கிறான்.

இந்த வாழ்க்கை ஒரு நாடகம் நாவல் தற்போது சாகித்திய அகாடமியின் வெளியீட்டில் "மனோதிடம்" என்ற பெயரில் கிடைக்கிறது. இதை வி.ஒய் கண்டக் அவர்களின் ஆங்கில மூலத்திலிருந்து ந.சுப்பிரமணியம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
நான் இந்த நாவலை  தேசிய புத்தக நிறுவனம் வெளியீட்டில் துளசி ஜெயராமன் மொழிபெயர்ப்பில் படித்தேன்.மனோதிடம் என்ற பெயரில் வந்துள்ள நாவலுக்கும்,வாழ்க்கை ஒரு நாடகம் என்ற பெயரில் உள்ள நாவலுக்கும் பக்க அளவிலும் மொழிபெயர்ப்பிலும் வித்தியாசங்கள் உள்ளது.குஜராத்தி மொழி இலக்கியத்தில் இந்த "வாழ்க்கை ஒரு நாடகம்" நாவலுக்கு முக்கிய பங்கு உண்டு.வாய்ப்புள்ளவர்கள் வாசிக்கலாம் ///

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்